வாழை சாகுபடி

உயிர்நாடி விவசாய நண்பர்கள் ஞாயிறு(20-11-16) அன்று நடந்த வாழை மற்றும்  உளுந்து விவாதத்தின் (எழுத்து, குறல்) அனுபவ விவசாயிகளின் தொகுப்பு.

கலந்து கொண்ட நண்பர்கள் விவரம் – சுரேஷ் – தானிப்பாடி, அசோக் – கார்கூடல்பட்டி, பாட்ஷா – தஞ்சாவூர், சீனிவாசன் – தெள்ளார், சுரேஷ் – காரமடை, செல்வகுமார் – வத்லகுண்டு, அனபழகன் – குளித்தலை, புவனேஷ்வரி – கோவை, நாகராஜ் – கோவை மற்றும் குழுவினர்

வாழை சாகுபடி(எழுத்து வடிவில்)

வாழை சாகுபடி செய்யும் நிலத்தில் முன்னதாக கிழங்கு பயிர் சாகுபடி செய்து இருக்க கூடாது.

பட்டம் ஆடி முதல் மார்கழி வரை.

பல தானியங்கள் விதைத்து மண்ணில் மறுக்கி விட்டு விடவேண்டும். 30 நாள் கழித்து பயிர் செய்யலாம்.

ரகங்கள்

தேன் கதலி ,பூவன், G9, செவ்வாழை,ரஸ்தாளி, மொந்தன், ஏலக்கி, போன்றவை விற்பனை வாய்ப்பு அதிகம் உள்ளவை.  மேலும்  நாடன் , நேந்திரன், குண்டால், சொர்ணமுகி ரகங்களும் உண்டு. தேன்வாழையை கற்பூர வள்ளி எனவும் கூறுவார்கள். தேன் வாழை வீட்டு உபயோகத்திற்காக வைத்திருப்பது வழக்கம். பழம் கொஞ்சம் சிறியதாக இருக்கும் ஆனால் மிக ருசியாக இருக்கும்.  களர், உவர் மண் வகைகளிலும் வறட்சியிலும், தாங்கி வளரக்கூடியது கற்பூரவல்லி ரகம், மரங்கள் தடித்து வளர்வதுடன் உயரமாகவும், பழுத்தாலும் காம்பு உதிராமல் நிலையாக இருக்கும்.

மண்ணின் தன்மை, சாகுபடி செய்யும் பகுதி, ரகத்திற்கேற்ப இடைவெளி விடவேண்டும்

செவ்வாழை 7×8

மொந்தன்.     7×7

பூவன்.             6×7

ரஸ்தாளி       6×7

ஏலக்கி.          6×7

கதலி.             7×7

G9                    6×6

என்ற அடி கணக்கில் இடை வெளியில் பயிர் செய்யலாம்.

இரட்டை நடவு G9 க்கு 6×8 என்ற கணக்கிலும்

முக்கோண நடவு 8×9 என்ற இடைவெளியில் நடவு செய்யலாம், 10 வருடங்களுக்கு முன்னதாகவே செய்து வெற்றி கண்ட நடவு முறைங்க.

விதை நேர்த்தி

பொதுவாக திசு வாழை நல்ல வரவேற்பை பெற்றுள்ளன அதில் குறைந்தபட்சம் 4 முதல் 6 இலைகள் கொண்ட கன்றுகளை ரகத்திற்கேற்ப தேர்வு செய்து நடவேண்டும்.

பக்க கன்றுகள் தேர்வு செய்யும்போது ஊசி போன்ற இலைகள் விட்டிருக்கும் கன்றுகள் தேர்வு செய்வது சிறப்பு. அகலமான இலை தேர்ந்தெடுத்தால் வளர்ச்சி மெதுவாக வரும்.  இவை ரகத்திற்கு ஏற்ப 2 கிலோ முதல் 4கிலோ எடை வரை மாறுபடும்.  இப்படியாக தேர்வு செய்த கன்றுகளை முதல் நாள் டிரைக்கோடெர்மா மற்றும் சுடோமோனாஸில் விதை நேர்த்தி செய்து இரண்டாம் நாள் ஜீவமிர்தத்தில் விதை நேர்த்தி செய்து நடவு செய்ய முளைப்பு திறன் நன்றாக இருக்கும், இறப்பு விகிதம் குறைந்து ஆரோக்கியமாக தழைத்து வரும்.

நடவு செய்ய 1×1 முதல்1½ × 1½  என்று குழி எடுத்து நடவு செய்யலாம். ஒவ்வொரு குழியிலும் 1kg  மண்புழு உரம் இட்டு அதன் மேல் கன்றுகள் வைக்கலாம்.

கன்றுகள் நடவு செய்து குழி மூடி விட்டு உடனே பாசனம் செய்யவேண்டும்

சொட்டுநீர் பாசனம் அல்லது தெளிப்பு நீர் பாசனம் உகந்தது. 3 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்வது சிறந்தது.

15 நாட்கள் ஒரு முறை அமிர்தகரைசல் 200 லிட்டர்  பாசன நீரோடு கலந்துவிட வேண்டும்.

30 நாட்கள் ஒரு முறை ஜீவாமிர்தம்,

90 நாட்கள் ஒரு முறை பஞ்சகவ்யா மற்றும் மீன் அமிலம் என பாசனத்தில் தனித்தனியே கொடுக்க வேண்டும்.

கன்று நடவு செய்த நாள் முதல் 60 நாட்களுக்குள் பயிருக்கு தேவையான மணி சத்துக்கள் கொடுத்து விடவேண்டும். அதன்படி கன்று

நடவு செய்த நாள் முதல் 30ம் நாள் இடவேண்டிய இடுபொருட்கள் பின்வருமாறு.

1000கிலோ மக்கிய தொழு உரத்துடன், 2கிலோ வேம், 2கிலோ அசோஸ்பயிரில்லம்,  2கிலோ பாஸ்போபாக்டீரியா, கலந்து 5கிலோ வெல்லம், 100லிட்டர் நீருடன் கலந்து தெளித்து ஈர கோணி இட்டு மூடி வைத்து இந்த கலவையை 5 நாட்களுக்கு ஒரு முறை என 3 முறை வெல்ல நீர் தெளித்து மருக்கி எடுத்து 1ஏக்கர் கன்றுக்கு இவ்வளவு என்று சமமாக பிரித்து கன்றை சுற்றி இட்டு மண்ணுடன் கிளறிவிட்டு உடனே பாசனம் செய்ய வேண்டும்.

நடவு செய்த 60ம் நாள் இடவேண்டிய பொருட்கள்.

30ஆம் நாள் கலவை அப்படியே செய்து அதில் 100கிலோ வேப்பம் புண்ணாக்கு, 200கிலோ ஆமணக்கு புண்ணாக்கு, கலந்து கன்றினை சுற்றி இட்டு கிளறி விட்டு பாசனம் செய்ய வேண்டும்.

வாழையில் கிழங்கு அழுகல் நோய்

அறிகுறி வாழை நடவு செய்த மூன்று மாதத்தில் தெரிய ஆரம்பிக்கும். வாழை வளர்ச்சி இல்லாமல் இருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக அடி இலையில் இருந்து காய ஆரம்பிக்கும் பிறகு கன்று காய்ந்து விடும். இவற்றை இயற்கை முறையில் கட்டுப்படுத்த
டிரைக்கோடெர்மா விரிடி ஒரு லிட்டர் தண்ணிருக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் கலந்த கன்று ஒன்றுக்கு ஒரு லிட்டர் வீதம் கன்று நன்கு நனையுமாறு ஊற்ற வேண்டும்.

வாடல் நோய் அறிகுறிகள்

ஆரம்பத்தில் அடி இலையின் ஓரங்கள் மஞ்சளாக காணப்படும். நாளடைவில் இந்த மஞ்சள் நிறம் இலையின் மையப்பகுதி அல்லது நடுநரம்புக்குப் பரவி, கடைசியில் இலை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறுகிறது.பின்னர், இந்த மஞ்சள் நிறமானது அடி இலையிலிருந்து மேல் இலைகளுக்கும் பரவி வாழை மரத்திலுள்ள அனைத்து இலைகளும் மஞ்சள் நிறமாக மாறும்.பாதிக்கப்பட்ட மரத்தின் அடி இலைகள், இலைக்காம்பு பகுதிகள் ஒடிந்து தண்டைச் சுற்றி தொங்கும்.
வாடல்நோய் தாக்காத வாழைத் தோட்டங்களில் தார் வெட்டும் முன்பே சென்று பார்த்து கன்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும், நாடும் போது அவசியம் விதை நேர்த்தி செய்து நட வேண்டும். வாழையைத் தொடர்ந்து சாகுபடி செய்யாமல், நெல், மரவள்ளி போன்ற பயிர்களை ஓரிரண்டு ஆண்டுகள் சாகுபடி செய்தபின் வாழை நடவு செய்யலாம். ரஸ்தாளி, மொந்தன், சிறுமலை, நெய்வண்ணன், சிராஸ்மைக்கேல் ஆகிய வாழை ரகங்களை இந்நோய் வெகுவாக பாதிக்கின்றன. பூவன், நெய்பூவன், பச்சை வாழை, மூங்கில் , பேய்லாடன், நேந்திரன் போன்ற வகைகள் சற்று நோயைத் தாங்கும் சக்தி பெற்றவை. நோய் முற்றிய மரத்தை கிழங்கோடு தோண்டி எடுத்து எரித்தல் நோய் மேலும் பரவுவதைத் தடுக்க உகந்த வழியாகும். நோய் காணும் குழியில் சுண்ணாம்பை குழிக்கு 1.2 கிலோ வீதம் போட்டு ஆற விடவும். பனாமா வாடல் நோயை கிழங்கில் மருந்தை உட்செலுத்தி தடுத்திடலாம்.

120 ஆம் நாள்

மேலே சொன்ன கலவையில் பாஸ்போபாக்டீரியா விற்கு பதிலாக 2 கிலோ பொட்டாஷ் பாக்டீரியா கலந்து அத்துடன் 2கிலோ விரிடி மற்றும் 2 கிலோ சுடோமோனாஸ் கலந்து ஊட்டமேற்றி கன்றுகளுக்கு பிரித்து சற்று பெரிய வட்டத்தில் இட்டு பக்க கன்றுகளை நிலத்துடன் ஒட்டி அறுத்து அகற்றி tiller மூலம் மண்ணை கிளறி விட்டு பார் அணைக்க வேண்டும்.

180 ஆம் நாள்.

இது மிக முக்கியமான கட்டம்.

குலை தள்ளும் பருவம்.

நீர் பாசனத்தில் குறை இருக்க கூடாது.

120 ஆம் நாள் கடை பிடித்த கலவையுடன் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 200 கிலோ ஆமணக்கு புண்ணாக்கு, 100 கிலோ கடலை புண்ணாக்கு கலந்து பாசன பகுதியில் இட்டு கிளறிவிட்டு உடனே பாசனம் செய்யவேண்டும்.

200ஆம் நாள் முதல் குலை தள்ளிய தார்களில் பூக்கள் உடைத்து விட்டு 50 gm மண்புழு உரத்துடன் 50ml அமிர்த கரைசல் கலந்து 5×7  பாலிதீன்  கவரில் இட்டு பூ உடைத்த தண்டை போர்த்தி கட்டிவிட காய்கள் பருமானாகவும், நீளமாகவும் , நல்ல நிறத்தில் இருக்கும்.

தார்கள் ஈன ஆரம்பிக்கும் சமயத்தில் சற்று உயரம் குறைவாக உள்ள மரங்களை கண்டறிந்து கன்றுக்கு ½ கிலோ மண்புழு உரம் இட சீக்கிரம் தார் ஈனும். தார்களுக்கு மேலும் பஞ்சகவ்யா தெளிக்கலாம். தார் வெட்டிய பிறகு மரங்களை அகற்றாமல் சீரான பக்க கன்றுகளை விட்டு மீண்டும் பராமரிக்கலாம். சாணி கரைசல் 10 நாளுக்கு ஒரு தடவை இளங்ககன்றுகள் மீது தெளிப்பதால் அந்த வாடையின் காரணமாக ஆடுகள் வாழையை மேயாது.

தண்ணீர் பாசனம்

வாழைக்கு தினசரி தண்ணீர் தேவை:

செம்மண் நிலங்களில்

மழைகாலங்களில்

4-6 லிட்

இதர காலங்களில்

15-35 லிட்

 

களிமண் /குறு மணல் நிலங்களில்

மழை காலங்களில்

3-6 லிட்

இதர காலங்களில்

12-25லிட்

மொத்த நீர் தேவை 2500-2700மி.மீ

 

வாழை தார் ஈன்றவுடன்

bunch-sleeving-7

சாறு உறிஞ்சும் பூச்சி

புள்ளி நோய்

வெயிலடி காய்

இலைகள் உராய்வுனால் ஏற்படும் காயங்கள்

பறவைகளின் தாக்குதல்

ஆகிய வற்றிலிருந்து தடுப்பதற்காக வாழை தாருக்கு உரை இடலாம்

100 கேஜி தடிமன் உள்ள பாலிதீன் பை  [ வெள்ளை நிறம் / ஊதா நிறம் ] கொண்டு  உரை இடலாம். சில நிறுவனங்கள் இதற்காவே பைகள் விற்பனை செய்கின்றது

தாரின் வளர்ச்சிக்காக 6%  காற்றோட்டம் ஏற்படும் வகையில்  பையில் சிறு துளை இருக்குமாறு செய்திடவும்.

அவ்வாறு உரை இடுவதன் மூலம் 7  – 10  நாள் முன்னதாகவே தார் அறுவடைக்கு வந்து விடுகிறது.

 அறுவடை எவ்வாறு அறிவது

 வாழை காய் நுனியில் பூ உதிரும் காயை சுற்றியுள்ள வரும்புகள் மறைந்து மினுமினுப்பு கொடுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக தார் ஈன்று  சரியாக 90 நாட்கள் கடந்துவிட்டால் வெட்டும் பருவம் என எடுத்துக்கொள்ளலாம். தாரை மட்டும் வெட்டிவிட்டு, தாய் மரத்தை அப்படியே விட்டு விட வேண்டும். அதிலுள்ள சத்துக்களை எடுத்துக் கொண்டு, பக்கக்கன்றுகள் நன்றாக வளரும். தொடர்ந்து, இடுபொருட்களைக் கொடுத்து பாசனம் செய்து வந்தால், அடுத்த 9 மாதங்களில் மீண்டும் பலன் எடுக்கலாம்.

 ஊடு பயிர் 

banana-inter-crop

வாழையின் ஆரம்பகால வளர்ச்சி நிலையில் ஊடுபயிரிடுவது எளிது. உளுந்து,வெங்காயம், வேர்க்கடலை, துவரை, பாகல், சுரைக்காய், முள்ளங்கி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ், மிளகாய், கத்திரி, கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வெண்டை,, கீரை, பூசணி வகைகள், செண்டு மல்லி,   போன்றவை ஊடுபயிராக வாழையுடன் வளர்க்கப்படுகின்றன. மேலும் தனியே வாழை பயிரிடுவதை விட வெண்டையுடன் சேர்த்துப் பயிரிடுவது மிக அதிக இலாபத்தையும், வெண்டையைத் தொடர்ந்து, கொத்தவரை, அவரை போன்றவை நல்ல இலாபம் தரும் ஊடுபயிர்களாகும்.  ஒவ்வொரு பாரிலும் ஒவ்வொரு வகை ஊடுபயிரை நடவு செய்வது நல்லது. இது போன்று ஊடு பயிர்கள் செய்யும்போது இடுபொருட்கள் சற்று அதிக விகிதத்தில் கொடுக்க வேண்டும்.

2-ம் மாதத்தில் இருந்து 3-ம் மாதத்துக்குள் ஊடுபயிர்களை அறுவடை செய்து விடலாம். அறுவடை முடிந்த செடிகளை அப்படியே, உழவு ஓட்டி மடித்து விட்டால், அவை உரமாகி விடும்.

6-ம் மாதத்தில் வாழையில் பக்கக் கன்றுகள் தோன்றும். அவற்றில் வாளிப்பான ஒரு கன்றை மட்டும் விட்டுவிட்டு, மற்றவற்றைத் தோண்டி எடுத்து, நிலத்தில் ஆங்காங்கே மூடாக்காகப் போட்டுவிட வேண்டும்  அல்லது சிறு துண்டுகளாக்கி கோழிக்கும் மாட்டுக்கும் தீவன மாக்கலாம்.

30 நாட்களுக்கு ஒரு முறை பக்க கன்றுகளை அறுத்து அகற்றிவிட வேண்டும்.

150 ஆம் நாள்  முதல் 180 ஆம் நாள் வரை ஒரு கிலோ கல் சுண்ணாம்பை 10 லிட்டர் நீரில் கரைத்து அதில் 1 லிட்டர் உடன் 100 கிராம் சுடோமோனாஸ் சேர்த்து 10 லிட்டர் நீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளித்து விட வேண்டும்.

80% தார்கள் வெட்டிய பிறகு சீரான பக்க கன்றுகளை குலை தள்ளிய எதிர் புறத்தில் விட்டு அவற்றை 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை முறுக்கி விட்டு  காய்ந்த மரங்களை பாரில் போட்டு tiller இல் ஓட்டி விட்டு காய்ந்த மரங்கள் மீது லேசான மண் அணைக்க நல்ல பலன் கொடுக்கும்.

கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அதிகம் பயிரிடும் வாழை ரகங்கள் :

ஜி9, கதலி, நேந்திரன் மற்றும் செவ்வாழை.

விற்பனை மையங்கள் : கோவை, பிறகு அங்கு இருந்து நேந்திரன் மற்றும் கதலி போன்ற வாழை ரகங்கள் பெருமளவு கேரளா மாநிலத்திற்கு செல்கிறது.

ஜி9 அதிக அளவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் செல்கிறது.

Tissue culture  நாற்றுகள், என்ன வகையான வாழைகளுக்கு உள்ளது?

G9 உண்டு, செவ்வாழை உண்டு என்று கேள்வி பட்டேன், உறுதியாக தெரியவில்லை.

நேந்திரன் உண்டா எனவும் தெரியவில்லை !

பயன் பாடு

மொந்தன் வாழை பஜ்ஜி போட காயாகவே பயன் படுத்தபடுகிறது.

நேந்திரன் வாழை சிப்ஸ் போட காயாகவே பயன் படுத்தபடுகிறது.

 

கேள்வி பதில்

1.வாழை தோப்பில் எத்தனை முறை மறுதாம்பு விடலாம் ?

பதில் :   மறுதாம்பு விட கணக்கு இல்லைங்க. கிழங்கு அழுகல் மற்றும் வேற்புழு               தாக்குதல் வராமல் பார்த்துக்கொண்டால் போதும்.

2.வாழை தார் அறுவடை செய்த பின் மரத்தை தண்டோடு வெட்டி நிலத்திலேயே போட்டு உழவேண்டும் என்கின்றனரே ? தார் / வாழ பட்டை மூலம் வரும் பணம் vs நிலத்திலேயே போட்டு உழுதல் : சரியா?

பதில் : அப்படியே நிலத்தில் தூளாக்குவது சிறந்தது. அடுத்த பயிடுக்கு நல்ல பலன் கொடுக்கும். மேலும் இதனை   இரண்டு விதமா பார்க்கலாம், ஒன்று மதிப்பு கூட்டுதல், வாழை மரத்திலிருந்து கைவினை பொருட்கள் , உடைகள் இன்னும் இதர பொருட்கள் செய்ய பயன் படுத்தப்படுகின்றன. அடுத்து .. நமக்கு தேவையானவற்றை எடுத்து மீதத்தை மண்ணுக்கே கொடுத்து விடுவது , இது வாழை மட்டும் அல்ல அணைத்து பயிருக்கும் பொருந்தும். [ மக்கி மண்ணுக்கு உரமாகும் ]

3.ஒன்றிலிருந்து இரண்டு வருட இயற்கை வழி விவசாயம் பின் பஞ்சகவ்யா போன்றவை தேவையில்லை என்கின்றனரே ?

பதில் :  1-2 வருட என்பது மிக சீக்கிரம், குறைந்தது 5 வருடங்களுக்கு மேல் ஆகும், நீங்கள் முற்றிலும் இயற்கை வழி வேளாண்மை செய்து வந்தால்  மட்டும்  பசுந்தாள் உரம் மற்றும் கால்நடை கழிவுகள் போதிய அளவுகள் இருக்கும் பட்சத்தில் நுண்ணுயிர் பெருக்கம் நன்றாக இருக்கும். மண்புழுக்கள் அதிக அளவில் உற்பத்தி இருப்பது அதன் அறிகுறி. அப்படி இருக்கும் பட்சத்தில் நோய் தாக்குதல் தானாக குறைந்து இடுபொருள் இன்றி பயிர் செழிப்பாக வளரும்.

4.அதிக காற்று / மழையின் போது, முதலில் பாதிப்படைவது வாழை தோட்டங்கள் தான் !! வயலை சுற்றி உயர்ந்த மரங்களை ( சவுக்கு, மூங்கில், அகத்தி …. ) நட்டு வளர்த்தால் காற்று புயல் தாக்கத்திலிருந்து வாழை மரங்களை காப்பாற்றலாமாமே?

பதில் :  வயலை சுற்றி உயர் மரங்கள் நடவு செய்வது காற்றினை மேல் நோக்கி எடுத்துச்செல்லும். அச்சமயம் வாழைக்கு பாதிப்பு இருப்பதில்லை என தெரிவிக்கிறார்கள்.   வாழைக்கு மட்டும் அல்ல , உங்கள் வயலின் வரப்போரங்களில்  கட்டாயம் மரங்கள் இருக்கணும் / வளர்க்கணும் .. காற்று தடுப்பாக செயல்படும் .. உங்கள் நிலத்தின் மீது உள்ள ஈரப்பதத்தை நிலை நிறுத்த மரங்கள் உதவி புரியும் .. அவ்வாறு ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில் பயிர்கள் வாடாது.

5.வாழைத்தோப்பில், தார் எடுப்பவர்கள் , இலை, வாழ பட்டை நார் & தண்டு எடுக்க மாட்டார்களா?

பதில் :  தார் எடுப்பவர்கள் இலை, தண்டு, நார் எடுப்பதில்லை ஆனால் நாம் அதற்கென இருக்கும் சில சில்லறை வியாபாரிகளை வைத்து நல்ல லாபம் ஈட்டலாம்.  தார் அறுவடைக்கு பிறகு சில சமயங்களில் பக்க கன்றுகள் உள்ள இலைகள் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது.

 

வாழை ( குறல் வடிவில்)

சுரேஷ் – தானிப்பாடி, அசோக் – கார்கூடல்பட்டி, பாட்ஷா – தஞ்சாவூர், சீனிவாசன் – தெள்ளார், சுரேஷ் – காரமடை, செல்வகுமார் – வத்லகுண்டு, அனபழகன் – குளித்தலை, புவனேஷ்வரி – கோவை, நாகராஜ் – கோவை


Comments

Popular posts from this blog

விதை சேமிப்பு (2 July 2017) கலந்துரையாடல்

மண் மற்றும் நீர் பரிசோதனை