பசுமாடு சினை பிடிக்கவில்லையா ?
எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி
பசு மாடுகளில் ஒரு சில மாடுகளுக்கு கர்ப்பபையில் பிரச்சினை இல்லை. சரியாக 21 நாட்களுக்கு ஒரு முறை பருவத்திற்கு வருகிறது. சரியான நேரத்தில் சினை ஊசி அல்லது காளையுடன் சேர்த்தும் பசுமாடு சினை பிடிக்கவில்லையா ? ஒரு முறைக்கு பலமுறை சினை ஊசி அல்லது காளையுடன் சேர்த்தோ சினை பிடிக்க வில்லையா?
இதற்க்கான இயற்கை வழியில் எளிய தீர்வு, இந்த நான்கு பொருட்கள் மட்டும் போதும்.
- புற்று மண்
- மலைவேம்பு இலை
- சோற்றுக் கற்றாழை
- கோவை இலை
முதல் நாள் கொடுக்க வேண்டியவை
மாலை நேரத்தில் 1கிலோ புற்று மண் 1 லி தண்ணீரில் நன்றாகக் கலந்து வைக்கவும். மறுநாள் காலை புற்று மண் தண்ணீர் கலந்த கலவையில் மேலே தெளிந்து உள்ள தண்ணீரை எடுத்து மாடிற்க்கு கொடுக்க வேண்டும்.
இரண்டாம் நாள் கொடுக்க வேண்டியவை
மலை வேம்பு இலை மூன்று கைப்பிடி எடுத்து கொள்ளவும். மலை வேம்பு இலையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி காலை வேளையில் மாடுகளுக்கு கொடுக்க வேண்டும்.
மூன்றாம் நாள் கொடுக்க வேண்டியவை.
சோற்றுக் கற்றாழை இரண்டு மடல், சோற்றுக் கற்றாழையை மடலில் உள்ள முற்களை சீவி விட்டு காலை வேளையில் மாடுகளுக்கு கொடுக்க வேண்டும்.
இந்த மருந்துகளை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் கொடுத்தால் போதும்.
அதாவது
- முதல் நாள் – புற்று மண் தண்ணீர்
- இரண்டாம் நாள் – மலை வேம்பு இலை
- மூன்றாம் நாள் – சோற்றுக் கற்றாழை
இந்த மருந்துகளை மூன்று வாரங்களுக்கு கொடுத்து வர வேண்டும். மூன்று வாரம் முடிந்ததும் மாடு பருவத்திற்கு வந்து விடும்.
மாடுகள் மாலை நேரத்தில் சினைக்கு வந்தால் மறுநாள் காலையிலும், காலை நேரத்தில் சினைக்கு வந்தால் அன்று மாலையும் சினை ஊசி அல்லது காளையோடு சேர்க்கவும்.
சினை ஊசி அல்லது காளையோடு சேர்த்து ஒரு மணி நேரம் கழித்து கோவை இலை
இரண்டு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பசு மாட்டிற்கு கொடுக்க வேண்டும்.
நண்பர்கள் தங்களுடைய பண்ணையில் வளர்த்து வரும் மாடுகளில் ஒரு சில மாடுகள் சினை பிடிக்காமல் இருக்கும் அந்த மாடுகளுக்கு இந்த எளிய இயற்கை வழிமுறையை பின்பற்றும் போது 100க்கு 95 மாடுகள் சினை பிடிக்கும். இந்த வழி முறைகளை பின் பற்றும் போது வருடத்திற்கு ஒரு கன்றுகள் எடுக்கும் போது பண்ணையில் பால் உற்பத்தியும் அதிகரிக்கும் .
*குறிப்பு
முதல் முறை அல்லது இரண்டு கன்று ஈன்ற மாடுகள் சினை பிடிக்க வில்லையா என்றால் மூன்று அல்லது நான்கு வாரங்கள் கொடுத்தால் போதும்.
கன்று போடத இளம் வயது கிடாரிகள் (இரண்டு பல் மற்றும் நான்கு பல் வயதுடையவை ) பல முறை சினைக்கு வந்தது சினை பிடிக்க வில்லை என்றால் இந்த மருந்தை ஏழு வாரங்கள் தொடர்ந்து கொடுத்து வர வேண்டும். ஏழு வாரங்கள் முடிந்தபின் மாடு சினைக்கு வரும் போது காளையுடனோ அல்லது சினைஊசி போடவும்.
ஏழு வாரங்கள் முடிவதற்கு முன் மாடு சினைக்கு வந்தால் சினை ஊசி அல்லது காளையுடனோ சேர்க்க கூடாது.
நன்றி
அசோலா சதீஷ்குமார்
திருவண்ணாமலை
Comments
Post a Comment