ஒருங்கிணைந்த பண்ணையம்

08-01-17 அன்று நடைபெற்ற விவாதத்தின் தலைப்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் கருத்துக்களை கார்கூடல் பட்டி அசோக்குமார் அவர்களின் அனுபவக்கருத்தை பார்க்கலாம்.

விவசாயம் நஷ்டம் கொடுக்கும் தொழில் என்று முத்திரை இடப்பட்டு அவற்றை உண்மை என நிரூபித்த விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணையத்தை கடைபிடிக்காததே முதல் காரணம்.

ஒரு விவசாயிக்கு வருமானம் என்பது

1.தினசரி
2.வாரம் ஒருமுறை
3 .மாதம் ஒருமுறை
4 .ஆறு மாதங்களுக்கு ஒருமுறை
5 .வருடம் ஒருமுறை
6 .மூன்று வருடங்களுக்கு ஒரு முறை என ஆறு வகைகளில் வருமானங்கள் வரவேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் மழை இல்லாமல் போனாலோ அல்லது பயிர் பொய்த்து போனாலோ நஷ்டம் ஏற்படாமல் தற்காத்து கொள்ளலாம்.

ஒவ்வொரு விவசாயிக்கும் விவசாயம் சார்ந்த ஏதோ ஒரு தொழில் இருக்கவேண்டும்

உதாரணமாக

  1. தேங்காயில் இருந்து கொப்பரை எடுப்பது
  2. பாலில் இருந்து வெண்ணை மற்றும் மோர் எடுப்பது
  3. கரும்பில் இருந்து வெல்லம் எடுப்பது

போன்ற ஏதோ ஒரு சிறு தொழில் அமைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். இப்படி சிறு தொழில் அனைத்தும் விவசாயிகள் கையில் இருந்த காலம் போய் விவசாயி அல்லாதவர்கள் செய்வதால் குறுகிய காலத்தில் அதிக லாபம் எடுத்து சென்று விடுகிறார்கள்.

ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது ஒரு விவசாயி அவர் சார்ந்த பல தொழில் செய்து பிழைக்க வேண்டும் என்ற ஒரு பொருளில் மட்டும் எடுத்து கொள்ளாமல் விவசாயிகள் ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை இங்கு மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி சொல்ல ஆசைப்படுகிறோம்.

தினம் வருமானம் என்ற முறையில் சில கறவை மாடுகள் வைத்து பால், மோர், வெண்ணை என வியாபாரம் செய்யலாம், மீன் வளர்ப்பில் ஈடுபட்டு தினம் வருமானம் தேடலாம். காய்கறிகள், கீரைகள் சுழற்சி முறையில் பயிரிட்டு தின வருமானத்தை அதிக படுத்தி கொள்ளலாம்.

வார வருமானம் என்றால்

கோழி, காடை, வாத்து, வான்கோழி, போன்றவற்றை வளர்த்து வருமானம் ஈட்டலாம், சுழற்சி முறையில் வாழை பயிர் செய்து வந்தால் வாரம் ஒருமுறை வருமானம் பார்க்கலாம். சிறுதானியங்கள் பயிறு வகைகள் போன்றவற்றை பயிர் செய்து மூன்று மாதங்கள் ஒரு முறை வருமானம் பார்க்கலாம், நீண்ட கால பயிர்களான மரங்களை வளர்து 5 வருடங்கள் ஒரு முறை நல்ல வருமானம் ஈட்டலாம்.

எமது அனுபவத்தை மட்டும் இங்கு பகிர விரும்புகிறோம்.  இயல்பாக நாம் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் நண்பர்கள் கூற்றுப்படி ஆடு, மாடு , முயல் , கோழி , நீர் மேலாண்மைக்காக பண்ணை குட்டைகள் அமைப்பது போன்ற பல விஷயங்கள் உள்ளன. இவற்றை பற்றிய விழிப்புணர்வும் இன்றைய இளைய தலைமுறைகளிடம் நிறையவே உள்ளன. இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று தான் நம்முடைய ஒருங்கிணைப்பு என்பது. விதை பற்றி பேசினாலே சிலருக்கு பிடிக்காது ஆனால் எதிர்காலம் கூடி வாழ்வதற்கே என்பதை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை. இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் விவசாயத்தில் வெற்றி பெற போவதில்லை என்பது உணரப்பட வேண்டிய ஒன்று.

நமது பண்ணையில் 2 கன்றுகள் உள்ளன இவை இரண்டும் நமது குழு நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து வாங்கப்பட்டது அவற்றை பராமரிக்கும் பொறுப்பு எம்முடையது.  வாங்கப்பட்டு 3 மாதங்கள் ஆகிறது. மேலும் விவசாயிகள் ஒன்று கூடி நாம் உற்பத்தி செய்யும் பொருளை சரியாக கொண்டு சேர்த்து சரியான விலை பெற ஒருங்கிணைப்பு வேண்டும். இல்லையேல் வெறும் பேச்சிலோ அல்லது ஏட்டிலோ தான் முடியுமே அன்றி செயல்பாட்டில் இராது என்று கூறினார்.

ஒருங்கிணைந்த பண்ணையம் ஒரு விவசாயி தனது விவசாயத்திற்குத் தேவையான வளத்தை தனது வயலுக்குள்ளேயே பெற்றுக் கொள்ள வேண்டும். வெளியில் காசு கொடுத்து வாங்கிச் செய்யாத தற்சார்பு நிலைக்கான திட்டமிடலுடன் கூடிய பண்ணை அமைப்பே ஒருங்கிணைந்த பண்ணையம் என்று மதுரையை சார்ந்த சாகுல் கூறினார்.

சென்னையை சார்ந்த மார்கபந்து அவர்களின் பார்வை , பண்ணையின் கதவுகள் பண்ணையாட்கள் வந்து போவதற்கும் நம் விளைபொருட்கள் விற்பனைக்கு செல்வதற்கு மட்டுமே திறக்கப்பட வேண்டும். விதை, தழை, இடுபொருள் அனைத்தும் பண்ணை உள்ளேயே தன்னிறைவு பெற வேண்டும் என்று அய்யா நம்மாழ்வார் கூறியதை நினைவு படுத்தினார் !!

ஒருங்கினைந்த பண்ணையை சுற்றி உயிர்வேலி: அனைத்தும் F, பலவித தேவைகளுக்காக உபயோகமாகும் வகையில், கீழ்கண்ட வகைகளில் அமைக்கவேண்டும்.

Firewood / Fuel  ( விறகு )
Furniture ( வீட்டு பொருள் செய்ய )
Food ( உணவு )
Fence ( வேலி )
Feed ( கால்நடை & பறவைகளுக்கு தீனி )
Fruit ( பழம் )
Fertiliser ( தழையுரத்திற்கு )
Flower ( பூக்கள் )
Future ( வருங்கால சந்ததியினருக்கு பலனளிக்கும் மரங்கள் )
Funeral ( கடைசி பயணம் )

திண்டுக்கல் பிரிட்டோவின் நண்பரின் கருத்தாவது தற்போதைய சூழலில் இயற்கை முறையில் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் தேவை, பயன்கள்,பயிற்சி, உற்பத்தி திட்டமிடல், விற்பனை திட்டமிடல் பண்ணை நிர்வாகம்,மதிப்பு கூட்டி விற்பனையும் உபயோகம்,இடுபொருள் தயாரிப்பு, இடுபொருள் உபயோகம், இடுபொருள் விற்பனை,குறிப்பாக பொருளின் இலை நிர்ணயம் மற்றும் பலவேறு அம்சங்களையும் மனதில் கருத்தில் கொண்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயமே.

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதில் திட்டமிடுதல் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. திட்டமிடுதலில்  இதன் வரிசையில் திட்டமிட்டு செயல்படுத்தினால் பலன் கிட்டும்.

1.நிலத்தின் அளவு,
2.நிலத்தின் தற்போதய அடிப்படை  வசதிகளான நீர், மின்சாரம்,சாலை வசதி,தடுப்பு வேலி,பாது காப்பு,மண்.
3.பண்ணையில் ஈடுபடும் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பு, பணியாளர்களின் எண்ணிக்கை
4.திட்டமிடப்படும் அல்லது எதிர்பார்க்கப்படும் வருமானம் இது நபருக்கு நபர் வேறுபடும் காரணம் அவரவர் விவசாயத்தை முழுமையாகவோ பகுதியாகவோ சார்ந்திருப்பதனால்.(தின,வார,மாத,மூன்று,ஆறு மாதம் மற்றும் வருடம்)
5.மிக முக்கியமான முதலீடு

மேற்கண்ட காரணங்களை கருத்தில் கொண்டு செயல்பட்டால் நிச்சயமாக வெற்றி பெறலாம். சில குறைகளை நிவர்த்தி செய்து கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1.விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்படுதல் மூலம் அனுபவ அறிவை பகிர்ந்து கொள்ளலாம். ஏனோ தெரியவில்லை தகவல்களையும் பிரட்சணைக்கான தீர்வுகளை பெறுபவர்கள் எண்ணிக்கை மட்டுமே அதிகமாக உள்ளது வருத்தம். தனது அனுபங்களை ஏனோ பகிர்ந்து கொள்ள தயங்குகின்றனர்.
2. விலை நிர்ணயம் செய்யும் பொழுது எந்த பொருளாக இருந்தாலும் விளை பொருளோ, விவசாய இடுபொருளோ நிரந்தர வாடிக்கையாளராக்க வேண்டும் என்பதனை மனதில் வைக்கலாம்.

இது எனது தாழ்மையான கருத்து. பிறருக்கு ஒத்த அல்லது மாறுபட்ட கருத்தும் இருக்கலாம் என்று முடித்து கொண்டார்

ஒருங்கிணந்த பண்ணையம் செய்து வரும் கிருஷ்ணன் அவர்கள் கூறுவதாவது ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு . இந்த முறையில் கால்நடை மற்றும் உயிரினங்களை பயன் படுத்தி மண்ணை வளப்படுத்தவும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த உதவும். என்னிடம்  நாட்டு மாடுகள் 6.   வெள்ளாடுகள் 15.   செம்மறிஆடுகள் 8.     நாட்டு கோழிகள் 50  மற்றும் நாய் பூனைகளையும் வளர்க்கிறேன்.  பசு மாட்டிலிருந்து பால் தயிர் மோர் நெய் சாணம் சிறுநீரும் கிடைக்கிறது. இதில் பஞ்சகாவ்யா ஜீவாமிர்தம் மற்றும் எருவும் தயாரித்து பயன் படுத்துகிறேன்.  வெள்ளாடு செம்மறிஆட்டின் குட்டிகளை கறிக்காக விற்பனை செய்கிறேன். எருவை தோட்டத்திற்கு பயன் படுத்துகிறேன். கோழியிருந்து தினம் பத்து முட்டை கிடைக்கிறது. எங்கள் குடும்பங்களுக்கு போக மீதியை அடை வைத்துக் குஞ்சுகளாக  உற்பத்தி செய்கிறேம். கோழிகளை கறிக்காக விற்பனை செய்கிறேம். ஒருங்கிணைந்த பண்ணையமாகவும் வரும் காலங்களில் ஒருங்கிணைந்த கூட்டு பண்ணையமாகவும் இனைத்து செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். அப்படி இனைத்து செயல் பட்டால் தான் விவசாயம் லாபமானாதாக இருக்கும்.

எடப்பாடியை சேர்ந்த பூபதி கூறியதாவது உயிர்நாடி  நண்பர்களே  மானாவாரி 3 ஏக்கர் நிலகடலை 1.5 ஏக்கர் நரிபயிர், பாசிபயிர் 30 சென்ட் நெல்நாற்று அனைத்தும் வருணபகவாண், சூரியபகவாண் அருள் ஆசியினால் பூமி தாயிக்கும் வாயில்லா ஜீவனுக்குமே உணவாகிவிட்டது எப்போ அடுத்த மழை வரும் என ? எதிர்பார்த்தபடி 100 கிலோ சோளம் கையிருப்பில்  இது எனது சென்றமாத நிலை. இன்னும் மழைவர 3 மாதம் ஆகும் அதுவரை என்ன செய்யலாம் என சிந்தித்தபோது மனதில் தோன்றியது  ஒருங்கிணைந்த பண்ணையம்  இப்போது  நாட்டுகோழி 13 தாய்கோழி 2  சேவல் (அசில்-பெருவிடைரகம்) கொண்டு  எனது வீடு அருகில் 1 ஏக்கர் பரப்பளவில் வலை கட்டி பண்ணை ஆரம்பித்துள்ளேன்  அந்த நிலத்தில் 35  மாமரம் உள்ளது மற்றும் 15 செம்மறியாடு உள்ளது 2 சீமை மாடு உள்ளது ஆடு மாடு சாணம் மாமரத்திற்கு எருவாகவும் ஆட்டிற்கு பில்லு வளர்வதற்கு ஊட்டசத்தாக  பில்லு மற்றும் சாணியில் வளரும்  பூச்சி ,புழு, கறையான், கோழிக்கு உணவாக இதுதான். இப்போது அரம்பித்துள்ள ஒருங்கிணைந்த பண்ணையம் என்றார்.                                                           .

உழவுப்பெருந்தகையோருக்கு இன்றைய அனைத்து நடைமுறை பிரச்சனைகளுக்கான ஒரே தீர்வு – தற்சார்பு அதற்கு சிறந்த வழி கூட்டுப்பண்ணையம் வேண்டும் என்பது  எழில் அவர்களின் வேண்டுகோள்.


Comments

Popular posts from this blog

விதை சேமிப்பு (2 July 2017) கலந்துரையாடல்

மண் மற்றும் நீர் பரிசோதனை